கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு : தமிழர் பகுதியில் துயரம்
களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் சனிக்கிழமை இரவு கடற்றொழிலுக்கு சென்ற 19 வயது இளைஞன் காணாமல் போன நிலையில் இன்று திங்கட்கிழமை (25) காலையில் களுதாவளை பகுதி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
கரையொதுங்கிய சடலம்
சம்பவ தினமான சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் கடற்றொழிலுக்கு சிறிய படகில் தனியாக சென்ற அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆகியும் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து இந்த கடற்பகுதிக்கு படகில் கடற்றொழிலாளர்கள் சென்று தேடிய போது விஜயகாந்த் சென்ற படகை கண்டுபிடித்த போதும் அதில் அவர் காணாமல் போன நிலையில் இன்று திங்கட்கிழமை சடலம் கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டு பிரேத பிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |