2.5 மில்லியன் மாயம் : நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட COPF குழுவின் அறிக்கை
இலங்கையின் திறைசேரியிலிருந்து மூன்றாம் தரப்புக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பான, அரச நிதி பற்றிய குழுவின் (COPF) அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அரச நிதி பற்றிய நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா இன்று (10) இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மூன்றாம் தரப்பினருக்கு மாற்றப்பட்ட சம்பவம், ஒரு சைபர் குற்றத்துடன் தொடர்புடைய மோசடி என அரச நிதி பற்றிய குழு கண்டறிந்துள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகம்
குறித்த அறிக்கையில், ஒட்டுமொத்த வெளிநாட்டு கடன் மீள் செலுத்தல் செயல்முறை குறித்து, தேசிய கணக்காய்வு அலுவலகம் உடனடியாக கணக்காய்வு ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி விவகாரத்தில் குற்றவியல் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது சட்ட மா அதிபரின் பொறுப்பாகும்.” என தெரிவித்தார்.
இதேவேளை, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு அமைய, துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம், ஹர்ஷ டி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்சித் தலைவர்களின் கூட்டம்
இதனிடையே, குறித்த அறிக்கை தொடர்பில் எதிர்வரும் வாரம் இரண்டு நாட்கள் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க கோரிக்கை முன்வைத்தார்.

இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்த கோரிக்கை தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |