யாழ். உட்பட மாவட்டங்களில் 2 மணிக்கு பின் ஏற்படவுள்ள மாற்றம்
நாட்டில் நிலவி வரும் கடுமையான வானிலை காரணமாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய 8 மாவட்டங்களுக்கு ‘வெப்ப எச்சரிக்கை’ (Heat Advisory) விடுத்துள்ளது.
பகல் நேரங்களில் மனித உடல் உணரும் வெப்பத்தின் அளவு (Heat Index) வழக்கத்தை விட அதிகரித்து, 'எச்சரிக்கை' நிலையை எட்டக்கூடும். வட, கிழக்கு மற்றும் தென்னகத்தின் குறிப்பிட்ட 8 மாவட்டங்களின் சில பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக காணப்படுகின்றது.
உடலின் நீர்ச்சத்தைப் பேண அடிக்கடி போதிய அளவு தண்ணீர் பருக வேண்டும். பகல் நேரங்களில் நேரடியாக வெயில் படும் இடங்களில் அதிக நேரம் இருப்பதைத் தவிர்க்கவும். வேலைகளைக் குறைத்தல்: பகலின் கடுமையான வெப்பம் நிலவும் நேரங்களில், கடினமான வெளிப்புற வேலைகள் மற்றும் செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இடியுடன் கூடிய மழை
இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10) சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மொனராகலை, புத்தளம், அம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |