தமிழக மீனவரின் சடலம் நடுக்கடலில் ஒப்படைப்பு
சிறிலங்கா கடற்படையால் நடுக்கடலில் ஒப்படைக்கப்பட்ட தமிழக மீனவரின் உடலை, இந்திய கடலோர காவல்படையினர் இன்று மீனவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
காரைநகர் கோவளம் பகுதிக்குள் கடந்த 18ஆம் திகதி ஊடுருவிய தமிழக மீனவரின் படகு, சிறிலங்கா கடற்படையினரின் படகுடன் மோதியதில் தமிழக மீனவரின் படகு முழுமையாக கடலில் மூழ்கியது.
இதன்போது இரு தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டபோதும், ஒருவர் காணாமல்போயிருந்தார்.
இவ்வாறு காணாமல்போன மீனவர் சிறிலங்கா கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டார்.
அவ்வாறு காங்கேசன்துறைக்கு கொண்டுவரப்பட்ட சடலத்தை காங்கேசன்துறைக்குச் சென்ற தடயவியல் காவல்துறையினர் மற்றும் நீதிபதி ஆகியோர் சடலத்தை பார்வையிட்டு, பிரேத பரிசோதனைக்காக உடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.
இதன் பிரகாரம் 20 ஆம் திகதி மாலை காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து போதனா வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டு, இரவு பிரேத பரிசோதனை இடம்பெற்று, நீரில் மூழ்கியதனால் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் - அதன் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பித்து சடலத்தை தமிழகம் அனுப்புவதற்கான பணி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.