பேசிப்பேசியே சம்பாதிக்கும் பொறிஸ் ஜோன்சன்
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் சொற்பொழிவுகள் ஆற்றி மூன்றே மாதங்களில் 1 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக சம்பாதித்து அசத்தியுள்ளார்.
பிரித்தானியாவின் பிரதமராக இருந்த பொறிஸ் ஜோன்சன் கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு, அவை நிரூபிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஜூலை மாதம் பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து விலகினார். ஆனால் இன்னும் ஆளும் கொன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.யாக பணியாற்றுகிறார்.
பல்வேறு இடங்களில் சொற்பொழிவு
பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து விலகிய பொறிஸ் ஜோன்சன், கடந்த செப்டம்பரில் இருந்து பல்வேறு இடங்களில் சொற்பொழிவுகளை நடத்தி வருகிறார், இவற்றின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் பொறிஸ் ஜோன்சன் £1 மில்லியன ($1.2 மில்லியன்) சம்பாதித்துள்ளார் என்ற தகவல் UK நாடாளுமன்ற உறுப்பினர்களின் நலன்களின் அதிகாரபூர்வ பதிவேட்டின்படி தெரியவந்துள்ளது.
நியுயோர்க்கில் உள்ள வங்கியாளர்கள், அமெரிக்காவில் உள்ள காப்பீட்டாளர்கள், போர்ச்சுகலில் CNN ஏற்பாடு செய்த உச்சி மாநாடு மற்றும் இந்தியாவில் மற்றொரு சொற்பொழிவு என பொறிஸ் ஜோன்சனின் சமீபத்திய சொற்பொழிவுகள் அமைந்துள்ளன.
சொற்பொழிவுக்கான கொடுப்பனவு
பொறிஸ் ஜோன்சனின் சொற்பொழிவு ஒன்றிற்கு £215,000 முதல் £277,000 ($267,000 முதல் $344,000 வரை) வரையிலான கொடுப்பனவுகளை பெறுகிறார் என்று UK நாடாளுமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ ஆவணத்தின்படி தெரியவந்துள்ளது.