வவுனியாவில் இன்று இடம்பெற்ற துயரம் - கதறும் பெற்றோர்
வவுனியா ஓமந்தை பாலமோட்டை பகுதியில் உழவு இயந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்து 5 வயது சிறுவன் பலியாகிய துயர சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள காணியொன்றினை உழவு இயந்திரத்தின் மூலம் பண்படுத்தும் நடவடிக்கையில் அதன் உரிமையாளர் ஈடுபட்டுள்ளார். இதன்போது வாடகைக்கு அமர்த்தப்பட்ட குறித்த உழவு இயந்திரத்தின் சாரதி காணியின் உரிமையாளரது மகனையும் அவரது உறவினரது மகனையும் உழவு இயந்திரத்தில் ஏற்றியபடி நிலத்தினை பண்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது இரு சிறுவர்களில் ஒருவன் திடீரென கீழே தவறிவீழ்ந்து உழவியந்திரத்திற்குள் சிக்கிபடுகாயமடைந்துள்ளான். எனினும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சிறுவன் ஏற்கனவே மரணமடைந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் பாலமோட்டை பகுதியை சேர்ந்த கந்தலதன் கனிஸன் வயது 5 என்ற சிறுவனே பரிதாபகரமாக உயிரிழந்தவனாவான்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
சம்பவத்தை அடுத்து அந்தப்பகுதி பெரும் சோகமயமாக உள்ளது.