செம்மணி புதைகுழி விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் பிரித்தானியத் தமிழர்கள் இன்று லண்டனில் உள்ள Primrose Hill பகுதியில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
தமிழர் தாயகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனிதப் புதைகுழிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படும் செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை தோண்டி எடுக்கப்பட்ட 583 மனித எச்சங்களை நினைவுகூரும் வகையில், போராட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோர் வெள்ளைத் துணிகளால் தங்களை மூடிக்கொண்டு தரையில் படுத்து இறந்த உடல்களைப் போன்று காட்சியளித்தனர்.
1996ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 18 வயதான தமிழ் மாணவி கிருஷாந்தி குமாரசாமியையும் நினைவுகூரும் வகையில், இரத்தக் கறைகளுடன் கூடிய பிரமாண்டமான வெள்ளைச் சீருடையொன்றைச் சுற்றி போராட்டக்காரர்கள் படுத்திருந்தனர்.
நீண்டகால மனித உரிமை மீறல்கள்
போராட்டத்தின் போது செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வீதியால் சென்றவர்களுக்கு தகவல் அட்டைகளும் விநியோகிக்கப்பட்டன.

சுற்றுலாத்துறையின் ஊடாக இலங்கை ஒரு கவர்ச்சிகரமான விடுமுறைத் தலமாக முன்னிறுத்தப்படும் நிலையில், நாட்டின் நீண்டகால மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்கால அட்டூழியங்கள் தொடர்பான வரலாற்றையும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதே இந்தப் பிரசாரத்தின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
பிரித்தானியத் தமிழர் கூட்டமைப்பு மற்றும் PEARL ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC), நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), உலகத் தமிழர் வரலாற்றுச் சங்கம், Tamil Solidarity, தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (MSDTE), பல்கலைக்கழக தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள் பங்கேற்றன.
PEARL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி மதுரா ராசரத்தினம், இந்த நடவடிக்கையின் நோக்கம் குறித்து கருத்து தெரிவிக்கையில்,
பல தசாப்தங்களுக்குப் பின்னர் செம்மணி பகுதியில் மனிதப் புதைகுழிகள் மீண்டும் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு வருவதாகவும், இதுவரை சுமார் 600 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழியை தமிழர்கள் மறந்துவிடவில்லை என்பதையும், உண்மையைப் புதைத்துவிட முடியாது என்பதையும் வெளிப்படுத்தும் வகையிலேயே இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
செம்மணி மனிதப் புதைகுழி
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம், 1990களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தமிழர்களின் காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

1998ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் முன்னாள் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச நீதிமன்றத்தில் வழங்கிய சாட்சியத்தின் மூலம் செம்மணியில் நூற்றுக்கணக்கான காணாமல் போன தமிழர்களின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் முதன்முதலில் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த தகவல் வெளியான போதிலும், செம்மணி தொடர்பான விரிவான விசாரணைகள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் பல்வேறு நிர்வாகத் தடைகள் மற்றும் தாமதங்களுக்கு உள்ளாகியதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். கிருஷாந்தி குமாரசாமி படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகளின்போதே சோமரத்ன ராஜபக்ச செம்மணி புதைகுழிகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டிருந்தார்.
1996 செப்டெம்பர் 7ஆம் திகதி யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடி அருகே கிருஷாந்தி குமாரசாமி பாதுகாப்புப் படையினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வழக்கு விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
அவரைத் தேடிச் சென்ற அவரது தாய், சகோதரர் மற்றும் அயலவர் ஆகியோரும் கொல்லப்பட்டு, கிருஷாந்தியின் உடலுக்கு அருகில் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்தக் கொலைகள் தொடர்பான வழக்கில் 1998ஆம் ஆண்டு சோமரத்ன ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து இராணுவ வீரர்கள் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டனர்.

செம்மணி மனிதப் புதைகுழி, காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் மற்றும் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழர் அமைப்புகள் தொடர்ந்தும் கோரி வருகின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடர் நடைபெறும் பின்னணியில் இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான உண்மை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான கோரிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என போராட்டத்தில் பங்கேற்ற பிரித்தானியத் தமிழர்கள் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |