எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்து பேருந்து சாரதிகள் திடீர் வேலை நிறுத்தம்!
நாட்டின் பல்வேறு இடங்களில் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து தனியார் பேருந்து சாரதிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதனால் பல பிரதேசங்களில் தனியார் பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்து அவிசாவளையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகளின் சாரதிகள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, அவிசாவளை பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அரச பேருந்துகளின் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் என்பன அடிப்படையில் குறைந்த பேருந்து கட்டணம் 40 ரூபாவரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
எதிர்வரும் 2 மாதங்களில் வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் இடம்பெறும்.
இதன்போது டீசலின் விலை கவனத்தில் கொள்ளப்பட்டு பேருந்து கட்டணம் திருத்தப்படும்.
தற்போதைய நிலை நீடிக்குமாயின் குறைந்த பேருந்து கட்டணம் 40 ரூபா வரை அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
