வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!
புத்தளம் பகுதியில் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் - வண்ணாத்திவில்லு பகுதியில் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி 5 அடி பள்ளத்தில் வீழ்ந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
புத்தளத்தில் இருந்து எலுவாங்குளம் பகுதியை நோக்கி பயணித்த வானிற்கு இடம் கொடுக்க முற்பட்ட வேளை பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன்போது இரண்டு சிறுவர்கள் உற்பட 16 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 11பேர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஐந்து பேர் வண்ணாத்துவில்லு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக வண்ணாத்துவில்லு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் வண்ணாத்திவில்லு காவல்துறையினர் பேருந்தின் சாரதியை கைது செய்துள்ளனர்.