பேசுவதைத் தவிர்ப்போம்..! சீ.வீ.கே. சிவஞானத்தின் அவசர வேண்டுகோள்
கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளைப் பொதுவெளியில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற திடசங்கற்பத்தை அனைவரும் எடுக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழு மற்றும் அரசியல் குழு உறுப்பினர்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 1949-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட எமது கட்சியின் முன்னோடிகளின் அர்ப்பணிப்புகள் மற்றும் தியாகங்களினால், இன்றுவரை தெளிவான அரசியல் இலக்குடன் உயிர்ப்புடன் செயற்பட்டு வருகின்ற ஒரேயொரு கட்சியாக எமது கட்சி விளங்கி வருகின்றது.
தமிழினத்தின் காப்பரணாக இருக்கும்
ஆரம்பம் முதலே கட்சியினைப் பிளவுபடுத்தி அழிக்கும் முயற்சிகள் தொடர்ந்த போதிலும், அவற்றையெல்லாம் நாம் ஒற்றுமையாக எதிர்த்து வெற்றி கண்டுள்ளோம்.

இலங்கைத் தமிழர்களின் இனத்துவ மற்றும் நிலத்துவ உரிமைகளைத் தளர்வின்றி முன்னெடுக்கும் தனித்துவமான ஒரே கட்சி நாங்கள் தான் என்பதை நாம் அனைவரும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
தென்னிலங்கை இனவாத அரசியலை எதிர்த்துத் தமிழினத்தின் காப்பரணாக இருக்கும் எமது கட்சியை உடைத்துச் சிதைப்பதற்காக, பலமான ஊடுருவல்கள் இடம்பெறுவதை நாம் காண்கிறோம்.
கட்சி ஒற்றுமை
இத்தகையச் சூழலில், கட்சி ஒற்றுமையாகச் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அண்மைக் காலமாக எமது கட்சியின் உள்விவகாரங்கள் பொதுவெளியில் பேசப்பட்டு வருவது, எதிரிகளுக்கு வாய்ப்பாக அமைவதை நீங்கள் உணராதவர்கள் அல்ல.
எனவே, பிறக்கின்ற இந்தச் சித்திரை புத்தாண்டிலிருந்து கட்சியின் உள்முரண்பாடுகளைப் பொதுவெளியில் விவாதிப்பதைத் தவிர்ப்போம் என்ற திடசங்கற்பத்தை அனைவரும் எடுக்க வேண்டும்.
கட்சி நலன் மற்றும் தமிழின நலன் கருதி இதனை உங்களிடம் அன்புரிமையுடன் வேண்டிக் கொள்கின்றேன் என்றுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |