பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் மீது ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு
இலங்கை ஒரு பீப்பாய் எண்ணெயை 286 அமெரிக்க டொலர்களுக்குக் கொள்வனவு செய்ததாக HSBC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) வெளியிட்ட அறிக்கையை, ஜே.வி.பி அல்லது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனமும் தங்களுக்குச் சாதகமாகத் திசைதிருப்ப முயல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெளியான செய்தியை மேற்கோள் காட்டி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
HSBC வங்கியின் அதிகாரி குறிப்பிட்டது 'சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்' (Refined Oil) மற்றும் அதன் விநியோகக் கட்டணங்கள் உள்ளிட்ட விலையையே தவிர, அரசாங்கம் கூறுவது போல 'கச்சா எண்ணெய்' (Crude Oil) விலையை அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
அந்த அதிகாரி எவ்வித உள்நோக்கமும் இன்றி, போர்க்கால சூழலால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தே பகுப்பாய்வு செய்திருந்தார் எனவும், ஆனால் அரசாங்கம் அவரை அச்சுறுத்தி பாடம் புகட்ட முயன்று தற்போது தாங்களே சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
முன்னதாக, 286 டொலர் விலையில் தாங்கள் கச்சா எண்ணெயைக் கொள்வனவு செய்யவில்லை எனத் தெரிவித்திருந்த பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், இவ்வாறான தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்திருந்தது.

மத்திய கிழக்கில் நிலவும் அமைதியற்ற சூழலுக்கு மத்தியில், சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்காக இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்று தோராயமாக 71.99 டொலர் முதல் 113.29 டாலர் வரையிலான விலைகளிலேயே கொள்வனவு செய்யப்பட்டதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் உண்மையை மறைக்க முயல்வதாக எதிர்க்க தரப்பினர் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |