மக்களை பயமடையச் செய்வதற்காக படையினரையும் பொலிஸாரையும் ஏவி விட்டுள்ள அரசாங்கம்!
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவினர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு, கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் கூட்டணி அலுவலகத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இன்று கிளிநொச்சியில் இருந்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 6,7 மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்றும், அவர்கள் எந்த குற்றங்களையும் செய்யவில்லை என்றும், முக்கியமாக தங்களுடன் வீட்டிலேயே இருந்தவர்களைத் தான் ஏதோ குற்றம்சாட்டி கைது செய்ததாகவும் தெரிவித்திருந்தார்கள்.
இது சம்பந்தமாக ரி.ஐ.டியிடம் நான் பேசியிருந்தேன். அவர்கள் கூறும் விடயங்கள் வித்தியாசமாக இருக்கின்றன இவர்கள் புலிகளோடு சம்பந்தப்பட்டவர்கள் என்றும், புலி இயக்கத்தை மீண்டும் தொடங்குவதற்காக அவர்கள் நடவடிக்கையில் இறங்கியதாகவும் பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்கள். அவர்களில் சிலர் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு கொரோனா பீடித்ததால் தங்காலைக்கு அனுப்பியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆனால் இவற்றை பார்க்கும் போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எங்களுடைய மக்களுக்கு தொல்லைகளை, பிரச்சினைகளை, தொந்தரவுகளை கொடுக்கின்றார்கள்.
அதற்கு காரணம் என்னவென்றால் எங்களுடைய மக்களை பயமடைய செய்யவேண்டும் என்பதற்காக அரசாங்கம் தங்களுடைய படைகளையும், பொலிஸாரையும் ஏவி இவ்வாறு செய்கின்றார்கள் என்பது என்னுடைய கருத்து.
எனவே இது சம்பந்தமாக நாங்கள் வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இருக்கின்றது. எங்களுடைய கட்சிக்கென தமிழ் மக்கள் சார்பிலே நீதிமன்றங்களில் நடவடிக்கை எடுப்பதற்காக சில சட்டத்தரணிகளை ஒன்றுசேர்த்திருக்கின்றோம்.
அந்த அடிப்படையில் இவர்களை அவர்களிடம் பாரப்படுத்தி சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நாங்கள் இப்போது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறான பல பிரச்சினைகள் இருக்கின்றன இவற்றையெல்லாம் நாங்கள் சட்ட ரீதியாக எவ்வாறு அணுகுவது என ஆராய்த்து வருகின்றோம்.
வெகு விரைவில் ஏதாவது ஒரு முடிவுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.