புதிய பயங்கரவாத தடைச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்
பல்வேறு தரப்பினரால் பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களுக்கு அமைவாக திருத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் சட்ட வரைவாளரால் மீளத் தயாரிக்கப்பட்டு மார்ச் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
ஆனால், சட்டமூலத்தின் சில பிரிவுகள் குறித்து உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகள் அதிருப்தி தெரிவித்த நிலையில், மீள பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனைகள் பெறப்பட்டது.
பல தரப்புடன் ஆலோசனை
அதனடிப்படையில் நீதி அமைச்சு ஊடகங்கள் ஊடாக இவ்விடயம் தொடர்பில் ஆர்வமுள்ளவர்களின் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் உத்தியோகபூர்வமாக கோரியதுடன், நீதியமைச்சர் சில தரப்பினருடனும் கலந்துரையாடியுள்ளார்.

சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் கருத்திற்கொண்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மூல வரைவு சட்டமூலத்தை திருத்தி சட்ட வரைவாளர் மூலம் புதிய வரைவு சட்டமூலமொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
புதிய வரைவு சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனவே புதிய சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரித்து அதன் மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நீதியமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.