தமிழர் தரப்புக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு
தமிழ்த் தரப்பின் ஒருமித்த நிலைப்பாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் முயற்சிக்கு வலு சேர்க்கும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“எமது இருப்பை ஒட்டுமொத்தமாக துடைத்து அழித்து விடக் கூடிய பாரிய நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து நிற்கும் நமது இனத்தை காக்க வேண்டிய கடமை எமது தோள்களில் இருக்கிறது
. அகத்திலும் புலத்திலும் இருக்கும் நம் இனத்தை ஒன்றுபடுத்தி ஒரு தேசிய இனமாக கட்டியமைக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இன்று இருக்கிறோம்.
எமது நீண்டகால குறுகிய கால இலக்குகளை ஒன்றோடு ஒன்று முரண்படுத்தி குழப்பிக் கொள்ளாமல், வரையறுத்து பயணிக்க காலம் பணித்துள்ளது.
இதனடிப்படையில் தமிழ்த் தேசிய பரப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து தமிழ் தலைமைகளும் ஒருமித்த நிலைப்பாட்டில் செயல்படுவது எமது இலக்குகளை கட்டம் கட்டமாகவும் நேர்த்தியாகவும் சென்றடைய வழிவகுக்கும்.
இதற்கு உதாரணமாக திகழும், பல நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியமானது, தமிழர் நலன் சார்பான ஒருமித்த செயல்பாட்டை முன்னெடுக்கும் தருணத்தில் தமிழர் தரப்பாகிய நாம் ஒருமித்து செயலாற்றுவது காலத்தின் கட்டாயம்.
எதிர்வரும் 27 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை சம்பந்தமான களநிலை ஆராய்வு மற்றும் கலந்துரையாடலுக்கு இலங்கை வர இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தோடு முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால் தமிழர் தரப்போடும் கலந்துரையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நம் தாயகப் பரப்பில் எமது இனம் முகம் கொடுத்து நிற்கும் இலங்கை அரசின் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையாக காணி அபகரிப்பு, குடியேற்றம் மற்றும் இராணுவ மயமாக்கல் ஆகிய விடயங்களையும் ஒருமித்து ஐரோப்பிய பிரநிதிகளின் கவனத்திற்கு கொண்டுவர இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்த, எமது முயற்சிக்கு ஒன்றிணையுமாறு அனைத்து தமிழ் தரப்பினருக்கும் அழைப்பு விடுப்பதாக” கூறப்பட்டுள்ளது.