விடுதலை புலிகளுக்காக நிதி திரட்டினாரா ஹரி ஆனந்தசங்கரி - வெடித்த புதிய சர்ச்சை
விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டும் அலுவலகத்தை சோதனை செய்த போது கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் கனடாவின் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரியின் (Gary Anandasangaree) தொலைபேசி எண் காணப்பட்டதாக குளோபல் நியூஸ் தெரிவித்துள்ளது.
2006 ஆம் ஆண்டு ரோயல் கனடியன் மௌவ்ன்டட் காவல்துறையினர் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய உலக தமிழ் இயக்க அலுவலகத்தை சோதனை செய்த போதே இந்த தொலைபேசி எண் கண்டுபிடிக்கப்பட்டதாக குளோபல் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த ஆவணம் பற்றி அமைச்சருக்கு தெரியாது என்றும் அது தமிழீழ விடுதலைப் புலிகளின் கனேடிய முன்னணி அமைப்பின் அலுவலகத்தில் இருந்தது எப்படி என்று தெரியவில்லை என ஹரி ஆனந்தசங்கரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆவணம் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது
இந்த ஆவணம் 2004 ஆம் ஆண்டு டிசெம்பர் 29 ஆம் திகதியிடப்பட்டதாக இருந்தது. அத்துடன் ஆழிப்பேரலையால் இலங்கையின் சில பகுதிகள் பேரழிவிற்கு உள்ளான மூன்று நாட்களுக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை அனுப்ப அரசியல்வாதிகளை வற்புறுத்திய ஒரு குழுவில் அவர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஹரி ஆனந்தசங்கரி அப்போது ஒரு சட்டக் கல்லூரி மாணவராக இருந்தார் என்றும் 'பேரழிவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இலங்கை மக்களுக்கு மனிதாபிமான நிவாரணத்தை ஆதரிப்பதற்காக இயக்கப்படும் முயற்சிகளை ஒழுங்கமைப்பதிலும் பங்கேற்பதிலும் முன்னணிப் பங்காற்றினார் என்றும் அவரின் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது என குளோபல் நியூஸ் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த ஆவணம் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து அமைச்சருக்கு எந்தத் தகவலும் தெரியாது.
இந்த விடயம் குறித்து சட்ட அமுலாக்கல் பிரிவு ஒருபோதும் அமைச்சரை தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர் உலகத் தமிழ் இயக்கத்துக்காக ஒருபோதும் பணம் திரட்ட வில்லை என்றும் அவரது அலுவலகம் குறிப்பிட்டதாக குளோபல் நியூஸ் தெரிவித்துள்ளது.
பணம் சேகரிக்கும் திட்டம்
ஹரி ஆனந்தசங்கரி லிபரல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படும் பணம் சேகரிக்கும் திட்டம் குறித்த பயங்கரவாத எதிர்ப்பு விசாரணையின் ஒரு அங்கமாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் திகதியன்று இந்த ஆவணம் கண்டு பிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஹரி ஏ." என்ற பெயருடன் ஆனந்தசங்கரி அப்போது பயன்படுத்திய தொலைபேசி எண்ணுடன் இந்த ஆவணம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனினும் ஹரி ஆனந்தசங்கரி எந்தத் தவறும் செய்ததாக அந்த ஆவணங்களில் கூறப்பட்டு இருக்கவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
