குடியேற்ற விண்ணப்பத்திற்கு ஆதரவு கடிதம்: ஹரி ஆனந்தசங்கரி விளக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினரென கூறப்படும் ஒருவரின் குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரித்து கடிதங்கள் எழுதிய போது, தாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமே தமது கடமையைச் செய்ததாக, கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) தெரிவித்துள்ளார்.
கனடாவில் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என அந்நாட்டு அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ள ஒருவரது குடியுரிமை விண்ணப்பத்தை அங்கிகரிக்குமாறு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கடிதம் அனுப்பியமை குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் எனக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த செந்தூரன் செல்வகுமாருக்கு கனேடிய குடியுரிமை வழங்குமாறு ஹரி ஆனந்தசங்கரி இரண்டு கடிதங்களை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினராக கடமை
குறித்த கடிதங்கள் 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல் முறையாக பதிலளித்த போதே ஹரி ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று, உதவி கோருவோருக்கு சேவைகளை வழங்குவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி குற்றம் சுமத்தப்பட்ட விடயத்தில், தாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக தமது கடமைகளை செய்ததாக கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கடுமையான வாதப் பிரதிவாதங்கள்
இந்தநிலையில், பொது பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி மீது தமக்கு பூரண நம்பிக்கை உண்டு, குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) நிராகரித்துள்ளார்.
கெரி ஆனந்த சங்கரி தொடர்பில் கனடிய அரசியல் பரப்பில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் கனடா பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
