முதன்முறையாக டின் மீன்களை ஏற்றுமதி செய்த இலங்கை
இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட டின் மீன்கள் முதற் தடவையாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் (Rathna Gamage) மேற்பார்வையில் மதுரங்குளியிலுள்ள தொழிற்சாலையொன்றில் உற்பத்தி செய்யப்பட்ட டின் மீன்கள் இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன்கள் வெளிநாட்டு சந்தைகளில் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதற் தடவையாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐந்து இலட்சம் டின் மீன்களை உற்பத்தி
அந்தவகையில், குறித்த டின் மீன்கள் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நாட்டில் நாளாந்த டின் மீன் நுகர்வு மூன்று இலட்சம் எனவும், ஒரு நாளைக்கு ஐந்து இலட்சம் டின் மீன்களை உற்பத்தி செய்யும் திறன் இருப்பதாகவும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டுக்குள் டின் மீன் ஏற்றுமதி மூலம் 8 மில்லியன் டொலரை நாட்டிற்குள் கொண்டு வர முடியும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் தற்போது 21 டின் மீன் தொழிற்சாலைகள் இயங்கி வருவதாக ரத்ன கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 1 வாரம் முன்
