சட்ட விரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
சட்ட விரோத தொழில்முறைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) தெரிவித்துள்ளார்.
இன்று மன்னாரில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda), கடற்றொழிலாளர் சங்கப் பிரதிகள் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத தொழில் முறைகள் உட்பட கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் கலைந்துரையாடப்பட்டது.
இதன்போது மேலும் தெரிவித்த அமைச்சர்,
வளமான எதிர்காலத்தினை எமது மக்களுக்கு ஏற்படுத்துவதே நோக்கமாக இருக்கின்ற போதிலும், சட்ட விரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது என்று கூறினார். மேலும், கரைவலைத் தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் வின்ஞ் எனப்படும் இயந்திரங்களைப் பயன்படுத்துவதும் நிறுத்தப்பட வேண்டும்.
கடற்றொழிலாளர்கள் தடை செய்யப்பட்ட தொழில்முறைகளை கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்துவதில் எந்தவிதமான பாரபட்சங்களும் பார்க்கக்கூடாது என்று கடற்றொழில் திணைக்களப் பரிசோதகர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். கடமை செய்வதற்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுமானால் தனக்கு அறியத் தருமாறும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் ,
புனரமைக்கப்பட வேண்டிய கடற்றொழில் வீதிகள் தொடர்பான பட்டியலை முன்னுரிமை அடிப்படையில் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், முசலி போன்ற பிரதேசங்களில் ஏற்படுகின்ற கடலரிப்பினை தடுத்தல், கடலட்டை பண்ணை அமைக்க விரும்புகின்றவர்களுக்கு இடங்களை ஒதுக்குதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
3 இஞ்சிக்கும் குறையாத அளவு கண் வலைகளைப் பயன்படுத்தி 16 மைல்களுக்கு அப்பால் சுருக்கு வலை தொழிலை தற்காலிகமாக மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்