சதித்திட்டத்தின் பின்னணியில் யார்? அதிருப்தியில் கொழும்பு பேராயர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சில அரசியல்வாதிகள் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் முன்னாள் சட்டமா அதிபர் இந்தத் தாக்குதல் ஒரு சதித்திட்டம் என்று கூறியுள்ளமையால், அந்த சதித்திட்டத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முறையான விசாரணையை மேற்கொள்ளுமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கர்தினால் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர்,
விசாரணைகள் நகர்வதாக தெரியவில்லை, எனவே நாம் அதில் திருப்தி அடையவில்லை.
தெஹிவளையில் குண்டுதாரி தன்னைத்தானே வெடிக்க வைத்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும், அதே நேரத்தில் மற்றொரு குண்டுவெடிப்பாளரின் மனைவியும், முக்கியமான தகவல்களைக் கொண்டவருமாக கருதப்படும் "சாரா" எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சில பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் தாக்குதலுக்கு பொறுப்பேற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே ஐக்கிய நாடுகள் சபை மற்றும் கத்தோலிக்க திருச்சபையில் உள்ளவர்களிடம் இருந்து சர்வதேச அளவில் உதவி பெற நாம் நிர்பந்திக்கப்படுகிறோம் என்றார்.
இதேவேளை செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற வணக்கத்துக்குரிய தந்தை சிரில்
காமினி பெர்னாண்டோ, இலங்கை கடலோரப் பகுதிகள் முழுவதையும் வெளிநாட்டு
முதலீட்டாளர்களுக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்
சுமத்தினார்.