ஹிருணிகா மீதான கடத்தல் வழக்கு மீண்டும் விசாரணைக்கு!
டிஃபென்டர் ஜீப் (Defender Jeep) மூலம் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு (Hirunika Premachandra ) எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இதன்படி எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், முறைப்பாட்டாளரின் முதலாவது சாட்சியை எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகும்படி அழைப்பாணை அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி, தெமட்டகொடை பிரதேசத்தில் வைத்து அமில பிரியந்த அமரசிங்க எனும் நபரை ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மெய்ப்பாதுகாவலர்கள், அவருக்கு சொந்தமான டிஃபென்டர் ஜீப்பில் வைத்து கடத்திய சம்பவம் தொடர்பான வழக்கில், 29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தார்.
இச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது சாட்டப்பட்ட குற்றங்களை அவர் ஏற்க மறுத்திருந்தார். அவர் மீதான வழக்கு தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில் மீண்டும் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.