ரணிலின் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், லண்டனில் நடைபெற்ற தனது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகச் சென்றபோது, அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி, ஆகஸ்ட் 22, 2025 அன்று, குற்றப் புலனாய்வுத்துறையின் முன் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையான பின்னர் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 26, 2025 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

மருத்துவ அறிக்கைகளைப் பரிசீலித்ததைத் தொடர்ந்து, கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, தலா ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள பிணைகளில் அவரை விடுவிக்கப் பின்னர் உத்தரவிட்டிருந்தது.
விக்கிரமசிங்கவின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள் ஒரு பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பதவியில் இருக்கும் ஒரு ஜனாதிபதி மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட பயணங்களுக்கு இடையே தெளிவான வேறுபாடு இல்லை என்றும் தெரிவித்தனர். எனவே அரச நிதி முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர்கள் வாதிட்டிருந்தனர்.
வாக்குமூலம் பதிவு
இதேவேளை இந்த வழக்குத் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவின் இல்லத்திற்குச் சென்று அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்திருந்தனர்.

வாக்குமூலம் வழங்குவதற்காகத் தனது இல்லத்திற்கு வருமாறு மைத்திரி விக்ரமசிங்க விடுத்த எழுத்துப்பூர்வ கோரிக்கைக்கு அமைவாகவே, சிஐடி அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |