முதுகெலும்பு இல்லாத ஆட்சியாளர்கள்! எங்களிடம் தாருங்கள் அபிவிருத்தி செய்கின்றோம் - லஷந்த நாகொட அரசாங்கத்திற்கு சவால்
அரசாங்கத்திற்கு கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய முடியாவிட்டால் துறைமுக தொழிற்சங்கத்திற்கும்,பொறியியலாளர் சங்கத்திற்கும் தாருங்கள் நாங்கள் குறுகிய காலத்திற்குள் அபிவிருத்தி செய்கிறோம் என பொறியியல் சேவைகள் வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் லஷந்த நாகொட தெரிவித்துள்ளார்.
நாட்டை பாதுகாப்பதாக குறிப்பிட்டு வந்தவர்கள் இன்று கிழக்கு முனையத்தை கூட பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளார்கள் என குறிப்பிட்டுள்ள அவர், கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கினால் இந்திய- சீன அதிகார போட்டிக்கு இலங்கை பழியாக வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள சன சமூக கேந்திர மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்கவேண்டிய கட்டாயம் இருப்பதாக அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனையத்தின் ஊடாகவே அதிக வருவாய் கிடைக்கப் பெறுகின்றன.
பிற நாட்டு தரப்பினருக்கு வழங்கப்பட்ட முனையங்கள் ஊடாக கிடைக்கப்பெறும் வருமானம் குறைவானதாக உள்ளது. உலக துறைமுக தரவரிசை பட்டியலில் கொழும்பு துறைமுகம் 24 ஆவது இடத்திலும், இந்தியாவின் ஜவஹர்லால் நேரு துறைமுகம் 29 ஆவது இடத்திலும் உள்ளது வலய அடிப்படையில் பார்க்கையில் இலங்கையின் கொழும்பு துறைமுகம் முன்னணியில் உள்ளது. கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதாக குறிப்பிடும் செய்தி நகைப்புக்குரியது. இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அரசாங்கம் இந்திய நிறுவனத்துக்கு கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய வழங்குவது பாரிய விளைவை ஏற்படுத்தும்.
அதானி நிறுவனம் தற்போது இந்தியாவில் துறைமுகமொன்றை அபிவிருத்தி செய்து வருகின்றது. இவ்வாறான நிலையில் இலங்கையின் கிழக்கு முனையத்தை கொள்வனவு செய்ய முயற்சிப்பது கொழும்பு துறைமுகத்தை பலவீனப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே கருதப்படும்.
கொழும்பு துறைமுகத்தில் உள்ள பிரதான முனையங்கள் அனைத்தும் பிற நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கினால் எதிர்காலத்தில் துறைமுகத்தில் இலங்கைக்கு சொந்தமான முனையத்துக்கு கப்பல்கள் வரமுடியாத நிலை ஏற்படும். அரசாங்கம் பொருளாதார பிரச்சினை குறித்து மாத்திரமே கவனம் செலுத்துகிறது. கொழும்பு துறைமுகத்தில் தற்போது சீன நிறுவனமும் பங்குதாராக செயற்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவையும் இணைத்துக்கொள்வது சீனா- இந்தியா அதிகார போட்டிக்கு இலங்கை பழியாக வேண்டும். நாட்டை பாதுகாப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தற்போது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை கூட பாதுகாக்க முடியாமல் பலவீனமடைந்துள்ளது.
அரசாங்கத்திற்கு கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய முடியாவிட்டால் துறைமுக தொழிற்சங்கத்திற்கும்,பொறியியலாளர் சங்கத்திற்கும் தாருங்கள் நாங்கள் குறுகிய காலத்திற்குள் அபிவிருத்தி செய்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.