கோட்டாபய காலத்தில் நடந்த சம்பவம்: கடும் எதிர்ப்பு வெளியிட்ட முன்னாள் அமைச்சர்
கோட்டாபய ராஜபக்ச (gotabaya rajapaksa) ஆட்சியின் கீழ் கோவிட் தொற்று நோயால் மரணமடைந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யும் முடிவுக்கு தான் எதிரானவர் என்று முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன (Channa Jayasumana) தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சன்ன ஜெயசுமன, கோவிட் தொற்றுநோயால் மரணமடைந்த முஸ்லிம்களை அடக்கம் செய்ய மறுக்கும் முடிவு பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணம் காட்டி இராணுவ புலனாய்வு அடிப்படையில் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அடக்கம் செய்ய மறுப்பதை தான் எதிர்ப்பதாகவும், அப்போதைய கோவிட் பணிக்குழுவிற்கும் இதைத் தெரிவித்ததாகவும் சன்ன ஜெயசுமன ஆரம்பத்தில் இருந்தே குறிப்பிட்டார்.
அறிவியல் நிபுணராக நான் தெரிவித்த விடயம்
“ஒரு அறிவியல் நிபுணராக, வைரஸ் ஒரு இறந்த உடலில் உயிர்வாழ முடியாது என்ற கருத்தை நான் கொண்டிருந்தேன். எனவே அவர்களின் மத நடைமுறையின்படி அடக்கம் செய்வது ஒரு பிரச்சினையாக இருக்காது. நான் இதற்காகப் பேசினேன், ஊடக சந்திப்புகளையும் கூட வழங்கினேன்,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், அடக்கம் செய்ய அனுமதிப்பதை இராணுவ உளவுத்துறை எச்சரித்ததாகவும், இது மத பதட்டங்கள் உள்ளிட்ட பிற அச்சுறுத்தல்களுக்கு வழிவகுக்கும் என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
உடல்களை தகனம் செய்வது பொருத்தமான நடவடிக்கை அல்ல
ஒரு தொற்றுநோய் காலத்தில் இதுபோன்ற பதட்டங்கள் ஏற்படக்கூடாது என்று கூறிய அவர்,ம் கோவிட் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது பொருத்தமான நடவடிக்கை அல்ல என்றும், அவர்களின் மத நடைமுறைப்படி அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தான் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எச்சரித்த இராணுவ புலனாய்வு பிரிவு
“இருப்பினும், எனது பரிந்துரை தோற்கடிக்கப்பட்டது. அடக்கம் செய்வது பிற பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று இராணுவ புலனாய்வு எச்சரித்ததால் நாங்கள் அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என்று அவர் கூறினார்.
செய்தி அறிக்கைகள் துரதிர்ஷ்டவசமாக, தனது நிலைப்பாட்டை முற்றிலும் தவறாக சித்தரிப்பதாக சன்ன ஜெயசுமன சுட்டிக்காட்டினார், மேலும் அந்த அறிக்கைகள் தனது நம்பிக்கைகளுக்கு நேர் எதிரானவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 3 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்