சாவகச்சேரி நகர சபையின் துணைத் தலைவர் பதவி நீக்கம்: ஓகஸ்ட் 19 ஆம் திகதி இறுதித் தீர்ப்பு
சாவகச்சேரி நகர சபையின் துணைத் தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோரைப் பதவியில் இருந்து நீக்கிய வடக்கு ஆளுநரின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான வழக்கின் தீர்ப்பு, நேற்று (05.08.2026) வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எனினும், நீதிமன்றம் தீர்ப்பை எதிர்வரும் 2026 ஓகஸ்ட் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஞானப்பிரகாசம் கிஷோரை ஆளுநர் தனது அதிகாரத்தின் கீழ் பதவியிலிருந்து நீக்கியிருந்தார்.
மனுத் தாக்கல் பின்னணி
இந்தப் பதவி நீக்க நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டு, அதனை இரத்துச் செய்யுமாறு கோரி ஞானப்பிரகாசம் கிஷோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு தொடர்பான விசாரணைகள் வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் பல தடவைகள் இடம்பெற்றிருந்தன.
மனுதாரர் சார்பிலும் பதிலாளிகள் சார்பிலும் சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என நீதிமன்றம் முன்னதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்றைய நீதிமன்ற அமர்வில் வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தீர்ப்பை வழங்காமல் அதனை எதிர் வரும் ஓகஸ்ட் 19 ஆம் திகதி வரை ஒத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் மூலம் ஞானப் பிரகாசம் கிஷோரின் பதவி நீக்கம் சட்டபூர்வ மானதா? அல்லது இல்லையா? என்பது தொடர் பான நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மேலும் இரண்டு வாரங்களுக்கு பின்னர் வெளியாகவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |