சூடுபிடிக்கும் செம்மணி விவகாரம் : மறைக்கப்பட்ட உண்மைகளை அம்பலப்படுத்திய சோமரத்ன
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சிறைக்கைதியாக இருக்கும் இராணுவச் சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச தனது மனைவிக்கு கூறிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளதாக மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் (Saba Kugathas) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “முதலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளக நீதிப் பொறிமுறையில் நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்பதை ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
உதாரணமாக செம்மணியில் ஆடைகளின்றி கொல்லப்பட்ட தமிழர்களின் கொலைக்கு பொறுப்பான இராணுவ உயர் அதிகாரிகள் சுதந்திரமாக வெளியில் இருப்பதாகவும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடலங்களை மண்ணில் புதைத்தவர்கள் தண்டனை அனுபவிப்பதாகவும் வெளிப்படுத்திய விடயம் உள் நாட்டு நீதி என்பது ஏமாற்று நாடகம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் அரச படைகள்
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியான தமிழ் இனப்படுகொலையை அரங்கேற்றியது இலங்கை அரசின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் அவர்களை வழிநடத்திய ஆட்சியாளர்களும் என்பதை சோமரத்னவின் செம்மணி தொடர்பான வாக்குமூலம் உறுதி செய்கின்றது.

யுத்த காலத்தில் தொடர்ச்சியாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் இலங்கை அரச படைகளினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
இறுதிப் போர்
யுத்தகால இராணுவ முகாம்கள் மற்றும் இறுதிப் போரின் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிரந்தரமாக அமைக்கப்பட்ட இராணுவ முகாம்கள் யாவும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடலங்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகளாக இருக்கும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு விசாரணைகள் மற்றும் ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் நீதிமன்ற விசாரணைகள் என்பன பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான நீதியை வழங்கமாட்டாது என்பதுடன் பாதிப்புக்கள் யாவற்றுக்கும் சோமரத்ன ராஐபக்சவின் மனைவியின் கடிதத்தில் சுட்டிக்காட்டிய சர்வதேச நீதிப் பொறிமுறையே தீர்வாகும்'' என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 3 மணி நேரம் முன்