தமிழ் நாட்டில் தொடரும் நீட் தேர்வு தற்கொலைகள் - மகனை இழந்த துயரத்தில் தந்தையும் மரணம்
மருத்துவ பட்டப் படிப்பில் இணைவதற்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய விரக்தியில் மகன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், தந்தையும் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் சென்னையை அடுத்துள்ள குரோம்பேட்டை குறிஞ்சி நகரில் பதிவாகியுள்ளது.
நிழற்படக் கலைஞரான செல்வசேகர் மற்றும் அவரது 19 வயதான ஜெகதீஸ்வரன் ஆகியோரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
நீட் தேர்வு எனும் பலிபீடத்தில் பலியானவர்கள் பட்டியலில் ஜெகதீஸ்வரன் சேர்ந்து விட்டது மிகக் கொடூரமான நிகழ்வாகும் என தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பின்னணி

மருத்துவ படிப்பில் அதிக ஆர்வமாக இருந்ததால் தொடர்ந்து இரண்டு தடவைகள் நீட் தேர்வில் தோற்றிய ஜெகதீஸ்வரன், அந்த இரண்டு தேர்விலும் சித்தி பெறுவதற்கு தவறியிருந்தார்.
மூன்றாவது தடவையாகவும் நீட் தேர்வு எழுதும் நோக்குடன் ஜெகதீஸ்வரன் நீட் பயிற்சிக்கு பணம் செலுத்திய போதிலும் அவருடன் கல்வி கற்ற நண்பர்கள் வேறு துறைகளை தேர்ந்தெடுத்து அந்த துறைகளில் பட்டப் படிப்பை தொடர்ந்துள்ளனர்.
இதனால் நண்பர்கள் யாரும் நீட் தேர்வு எழுதவில்லை என்ற மனக் குழப்பத்தில் இருந்த ஜெகதீஸ்வரன், வீட்டில் யாரும் இல்லாத வேளை தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், நீட் தேர்வினாலேயே தனது மகன் தற்கொலை செய்துகொண்டதாகவும் இதேபோன்று ஏனைய மாணவர்களையும் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தந்தையான செல்வசேகர் கோரிக்கை விடுத்திருந்தார்.
தாய் பிரிந்து சென்ற நிலையில். மிகவும் பாசத்துடன் வளர்த்த மகனை இழந்த விரக்தியில் இருந்த தந்தையான செல்வசேகரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவம் சென்னையை அடுத்துள்ள குரோம்பேட்டை குறிஞ்சி நகர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் மாணவர்களின் உயர்வுக்கு தடைக்கல்லாக இருக்கும் நீட் தேர்வு முறையாக நிச்சயம் நீக்கப்படும் எனவும் அதற்கான சட்ட ரீதியான முயற்சியிலேயே தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.