தொழிலுக்கு அனுப்பிய பிள்ளை சவப்பெட்டியில் வந்த பரிதாபம்
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிய அனுப்பிய பிள்ளை சவப்பெட்டியில் வந்துள்ளதாக உயிரிழந்த இஷாலினியின் தாயார் இன்றையதினம் தெரிவித்தார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது மகள் இசாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் திசை திருப்பப்படுவதாக தெரிகிறது. பிள்ளைக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக காவற்துறையினர் விசாரணை நடத்த வேண்டும்.
ஆனால் அவ்வாறு இல்லாமல் இங்கு வந்து அவர்கள் எழுப்புகின்ற கேள்விகள் எம்மால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிள்ளைக்கு இங்கு வைத்து என்ன ஆனது, பிள்ளை இங்கு யாருடனும் தொடர்பில் இருந்தாரா? போன்ற கேள்விகளை அவர்கள் எழுப்புகிறார்கள்.
நாட்டின் முக்கிய இடத்தில் இருக்கின்றவர்களே இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்றால், நாட்டில் இவ்வாறு எத்தனை சம்பவங்கள் வெளியில் தெரியாமல் இடம்பெறுகின்றன? எமது பிள்ளைக்கு நியாயம் கிடைக்கும் வரையில் ஒரு சொட்டு கண்ணீர் கூட சிந்தமாட்டேன் என்று எமது பிள்ளையின் உடல் மீது சபதம் எடுத்திருக்கிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.