கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த நிலைமையை தவறாக புரிந்துகொண்டு மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி செயற்படக் கூடாது என வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கொரோனா தொற்றுக்குள்ளாகி கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தங்கியிருந்து சிகிச்சை பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெறும் சிறுவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. மூன்று சிறுவர்கள் மாத்திரமே தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வருவதில் தாமதமோ, தயக்கமோ வேண்டாமென நாம் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
அவ்வாறு தாமதிப்பது உயிர் ஆபத்துக்களை ஏற்படுத்தக் கூடும். தற்போது 95 சிறுவர்கள் மாத்திரமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர். எனினும் 30 பேர் வரையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற முடியும். அதற்கான வசதிகள் காணப்படுகின்றன.
இது நல்லதொரு பெறுபேறு எனினும் இதனை சாதாரணமாகக் எடுத்துக்கொள்ளக்கூடாது.
நாங்கள் தொடர்ந்தும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது நல்லது. நாளாந்தம் தொற்றுக்குள்ளாகி அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை 12 - 15 ஆக குறைவடைந்துள்ளது என்றார்.