யாழில் சிறுவர் வாள்வெட்டுக்குழு -வெளியான அதிர்ச்சித்தகவல்
யாழ்ப்பாணத்தில் சிறுவர் குழுவொன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளமை தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்.நாவாந்துறை பகுதியில் அண்மையில் 14 வயது சிறுவன் மீது 10 பேர் கொண்ட குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதலில் குறித்த சிறுவன் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இது தொடர்பில் யாழ்.காவல் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றத் தடுப்பு பிரிவினர் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என முறையிடப்பட்ட 10 பேரையும் நேற்று கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் சிறுவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அவர்கள் அனைவரும் 14 தொடக்கம் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்கள் யாழ்.நகரம், நாவாந்துறை, அத்தியடி, மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்து வாள்,கைக்கோடரி, என்பனவும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சிறுவர்கள் அனைவரும் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.