சீனாவை உலுக்கிய தீ விபத்து...! 28 பேர் பலி - தொடரும் மீட்பு பணிகள்
சீனாவில் தீ விபத்தில் சிக்கி 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்கிழக்கு சீன நகரமான ஜின்ஜியாங்கில் (Jinjiang) உள்ள காலணி தொழிற்சாலை ஒன்றிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்து பாரிய உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணியாளர்கள்
அத்தோடு இதற்கு காரணமானவர்கள் கடுமையாகப் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டதுடன் 200 இற்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த விபத்தில் எத்தனை பேர் காயமடைந்துள்ளனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக்கட்ட விசாரணை
சம்பவம் குறித்த ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த தொழிற்சாலையின் தரைத்தளத்தில் இருந்து இந்தத் தீ பரவியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு தொழிற்சாலையின் உரிமையாளர்களுக்காகப் பணிபுரியும் பலரை அதிகாரிகள் காவலில் எடுத்துள்ளதுடன் அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் ஹாங்காங்கில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 168 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து உயரமான கட்டிடங்களில் தீ விபத்துக்களைத் தடுப்பதற்கான பிரச்சாரத்தை சீனா ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |