சீனாவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளை பகிஷ்கரிக்கும் அவுஸ்திரேலியா
பீஜிங் நகரில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜதந்திர மட்டத்தில் பகிஷ்கரிக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது.
அவுஸ்திரேலியா தொடர்ந்தும் கலந்துரையாடலுக்கு உட்படுத்திய சீனாவின் ஷிங்ஜியாங் மாகாணத்தின் மனித உரிமை மீறல் உட்பட சில விடயங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
எனினும் அவுஸ்திரேலிய விளையாட்டு வீர, வீராங்கனைகள் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வார் எனவும் அவர் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியா தொடர்ந்தும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கான வழியை திறந்தே வைத்துள்ளது. சீனா, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை முன்னேற்றும் சந்தர்ப்பங்களை நிராகரித்து வருகிறது எனவும் ஸ்கொட் மோரிசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜதந்திர மட்டத்தில் பகிஷ்கரிக்க போவதாக அமெரிக்க இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.
இதற்கு பதிலளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது சீனா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.