ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தை செயற்றிறனுடன் முன்னெடுப்பதற்கு ஸ்ரீலங்காவுடன் கை கோர்க்க தயாராகும் சீனா!
ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தை செயற்றிறனுடன் முன்னெடுப்பதன் ஊடாக இலங்கையில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு இணைந்து செயற்படுவதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இரு நாட்டு தலைவர்களும் தொலைபேசியில் உரையாடியமை தொடர்பில் சீனாவின் அரச ஊடகமான CGTN இணையத்தளம் வௌியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இலங்கைக்கு விமான சேவை, கல்வி மற்றும் ஏனைய துறைகளில் அத்தியாவசியமான ஒத்துழைப்பை தொடர்ச்சியாக வழங்குவதாக சீன ஜனாதிபதி, ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு அறிவித்ததாகவும் CGTN இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் சீனா சட்டபூர்வமான ஆசனத்தை பெற்றுக்கொள்வதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பை ஒருபோதும் மறக்கப்போவதில்லை என ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
பூகோள நீதி மற்றும் சட்ட உரிமைகளை பாதுகாப்பதற்காக புரிந்துணர்வு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் ஸ்ரீலங்காவுடன் இணைந்து செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்குமான பரஸ்பர பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பதற்கும் நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் உலகளாவிய நீதி மற்றும் நியாயத்தை பலப்படுத்துவதற்கும் ஸ்ரீலங்காவுடன் தொடர்ந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஸ்தாபக ஆண்டு நிறைவை முன்னிட்டு சீனாவுக்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்ததுடன், தொற்றுநோயையும் அதன் பொருளாதார மீட்சியையும் எதிர்த்துப் போராடுவதில் சீனாவின் சாதனைகளை பாராட்டியுள்ளார்.
ஸ்ரீலங்காவின் பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் கிராமப்புற முன்னேற்றம் தொடர்பில் சீனாவின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் உட்கட்டமைப்பு கட்டுமானம், சுற்றுலா மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த தயாராக உள்ளதாகவும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக திட்டங்கள் துரிதமாக நிறைவேறுவதைக் காண்பதே தமது நோக்கம் எனவும் சீன ஜனாதிபதி இந்த கலந்துரையாடலின் போது கூறியதாக ஜனாதிபதி செயலகம் கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.