கால அவகாசத்துடன் இழப்பீடு கோரும் சீனா- சட்ட ஆலோசனையில் சிறிலங்கா!
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சீனாவின் கரிம சேதன உரத்தை ஏற்றி வந்துள்ள கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேதன பசளை ஒப்பந்தம் தொடர்பாக 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு கோரி சீன நிறுவனம், தேசிய தாவரங்கள் தொற்று நீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையத்திற்கு கடிதத்தை அனுப்பியுள்ளது.
குறித்த கடிதம் கடந்த 9ஆம் திகதி தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவையின் மேலதிக பணிப்பாளருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த இழப்பீட்டு கோரிக்கை கடிதத்துக்கு இதுவரை பதிலளிக்கப்படாத நிலையில், அதன் சட்ட நியாயாதிக்கம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் அத்திணைக்களத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையத்தின் அலட்சிய நடவடிக்கையால், தமது நிறுவனத்தின் நற் பெயருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்காக இந்த தொகையை நிறுவனம் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கரிம உரங்களுடன் கூடிய ´ஹிப்போ ஸ்பிரிட்´ என்ற சீன கப்பல் தொடர்ந்தும் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

