சீனர்களால் இலங்கைக்கு கிட்டவுள்ள பெரும் வாய்ப்பு
சீனாவில் இருந்து சுற்றுலாப் பயணங்கள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படுகின்றமை, இலங்கைக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமையும் என நோர்வேயின் முன்னாள் காலநிலை மற்றும் சுற்றாடல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு முன்னைய ஆண்டில் சுமார் 150 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ஏனைய உலக நாடுகளுக்கு சென்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார்.
சுற்றுலா நடவடிக்கை
2023 ஆம் ஆண்டு சீன சந்தையை இலக்குவைத்து சுற்றுலா நடவடிக்கையை முன்னெடுக்க கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை சுற்றுலா செயற்பாடுகளை மேற்கொள்வோர் கூறியுள்ளனர்.
சீனா இலங்கைக்கு ஒரு முக்கியமான சந்தையாகும் என இலங்கையின் உள்வரும் சுற்றுலா செயற்பாட்டாளர்களின் சங்கத்தின் தலைவர் நிஷாத் விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டில், இலங்கைக்கு ஒரு இலட்சத்து 67 ஆயிரம் சீன சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதாக தெரிவித்த விஜேதுங்க, குறுகிய மற்றும் நடுத்தர காலப்பகுதியில் இலங்கைக்கு இதேபோன்ற எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளைப் பெற முடிந்தால், அது தொழில்துறையை பெரிதும் மேம்படுத்தும் எனவும் கூறினார்.
ஆனாலும், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், பல நாடுகள் சீன விமான பயணிகளுக்கு தடைகளை விதித்துள்ளது. இதனால், இந்தத் திட்டம் விரைவில் சாத்தியமாவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 6 இலட்சத்து 78 ஆயிரத்து 392 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அந்நியச் செலாவணி
இலங்கையின் முன்னணி அந்நியச் செலாவணியில் ஒன்றான சுற்றுலாத்துறை, கொரோனா தொற்றுநோய், நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக பின்னடைவைச் சந்தித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் சுமார் 1.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளையும் 2024 ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்ப்பதை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.