சீனக் கப்பலுக்கு இந்திய இடையூறு! இலங்கைக்கு காட்டமான செய்தி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி, சீனக் கப்பலான யுவான் வாங் 5 இன் பயணத்திற்கு இடையூறு விளைவித்துள்ளதன் மூலம் பூகோள அரசியலை இந்தியா மேற்கொள்வதாக இலங்கை - சீன சமூக மற்றும் கலாசார ஒத்துழைப்பு சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
சீனக் கப்பலின் பயணத்தை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முடிவு இலங்கைகும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்தச் சங்கம் கூறியுள்ளது.
பிரவேச அளவுகோல்களில் மாற்றங்களை செய்தது ஏன்?
யுவான் வாங் 5 கப்பலானது ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கான அளவுகோல்களில் மாற்றங்களை செய்தமைக்கான காரணத்தை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என அச் சங்கத்தின் தலைவர் இந்திரானந்த அபேசேகர வலியுறுத்தியுள்ளார்.
தமது நாட்டின் கடற்பாதுகாப்பில் சீனாவின் யுவான் வாங் 5 ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பல் பாதிப்பை ஏற்படுத்தும் என இந்தியா கரிசனை வெளியிட்டுள்ளதை முழு உலகமுமே அறியும் என இந்திரானந்த அபேசேகர கூறியுள்ளார்.
தீர்மானங்களை இலங்கை மாற்றக் கூடாது
இத்தகைய சீர்குலைக்கும் வெளித் தலையீடுகளை மேற்கொள்வோரை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், வெளிவிவகார கொள்கைளுக்கு இணங்க ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் மாற்றக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் தீர்மானத்தை மற்றுமொரு நாடு எதிர்க்கும் விடயமானது, சர்வதேச சாசனங்களின் புரிதலின்மையையும் மற்றுமொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதையுமே எடுத்துக்காட்டுகின்றது என அவர் கூறியுள்ளார்.
இது அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளை தெளிவாக மீறுவதாகவும் இந்திரானந்த அபேசேகர குறிப்பிட்டுள்ளார்.
புவிசார் அரசியலை ஆயுதமாகப் பயன்படுத்தல்
நமது நாடு எதிர்கொள்ளும் சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் முயற்சியில், மற்றொரு நாடு புவிசார் அரசியலை ஆயுதமாகப் பயன்படுத்துவதுடன், இரட்டை எண்ணம் கொண்ட கொள்கைகளில் செயற்படுவதை காணக் கூடியதாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
எனினும் இலங்கையின் நேர்மையான மற்றும் நீண்டகால நட்பு நாடாக சீனா உள்ளதாகவும் இலங்கை - சீன சமூக மற்றும் கலாசார ஒத்துழைப்பு சங்கம் கூறியுள்ளது.
சீனாவுடனான மக்களிடையே நட்புறவுக்கான அமைப்பாக, இலங்கை - சீன சமூக மற்றும் கலாசார ஒத்துழைப்பு சங்கம், இலங்கை - சீன நட்புறவுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு முயற்சியையும் கடுமையாக எதிர்க்கிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, யுவான் வாங் 5 வருகையை கேள்விக்குட்படுத்தியதன் மூலம் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நட்புறவில் ஏற்பட்டுள்ள பாதகமான நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திரானந்த அபேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
YOU MAY LIKE THIS