ஆடு, மாடுகளுக்கு ‘சொக்லேட்’ தயார்! இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
ஆடு, மாடுகளுக்கான சொக்லேட்டை மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு மாத கால ஆராய்ச்சிக்கு பின்னர் மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள நானாஜி தேஷ்முக் கால்நடை அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுபற்றி அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.பி.திவாரி ( SB Tiwari) கருத்துத் தெரிவிக்கையில்,
பல்வேறு விட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த சொக்லேட் கால்நடைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
பசுந்தீவனம் கிடைக்காத போது, இதை கால்நடைகளுக்கு மாற்றுத்தீவனமாகவும் பயன்படுத்த முடியும்.
மாநில கால்நடை பராமரிப்புத்துறையின் உதவியுடன் இந்த சொக்லேட்டுகள் மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்படும்
மேலும், கால்நடை அறிவியல் பட்டதாரிகள் இந்த சொக்லேட் தயாரிக்கும் புதிய ஆலைகளை தொடங்குவதற்கு வசதியாக தயாரிப்பு தொழில்நுட்பம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாக்லேட்டை கால்நடைகள் சாப்பிடுகிறபோது, அவற்றின் பால் உற்பத்தி அதிகரிக்கும். கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இந்த சாக்லேட்டை கால்நடைகள் அப்படியே சாப்பிடலாம். பிற தீவனங்களுடன் சேர்த்தும் சாக்லேட்டை கால்நடைகளுக்கு வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரு சாக்லேட்டின் எடை 500 கிராம் அதன் ஒன்றின் விலை 25 ரூபாய் என்று கூறப்படுகிறது.
கால்நடை தீவன தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிற கடுகு புண்ணாக்கு, அரிசி தவிடு, வெல்லப்பாகு, ஸ்டார்ச், சுண்ணாம்புத் தூள் மற்றும் உப்பு போன்ற பல பொருட்களையும் கொண்டு தயாரிக்கப்படுகிற கால்நடை சாக்லேட்
விரைவில் இந்த சாக்லேட் சந்தைக்கு விற்பனைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.