தமிழர்களுக்கு சமஷ்டி ஒருபோதும் கிட்டாது - தமிழ்க்கட்சிகளின் நடத்தைக்கு அரசாங்கம் எதிர்வினை
தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரும் சமஷ்டி தீர்வு ஒருபோதும் சாத்தியமாகாது என்றும் அவ்வாறான ஒரு தீர்வை சிறிலங்கா அரசு அனுமதிக்காது எனவும் ஆளும் தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதிபல் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான விஜயத்திற்கு முன்னதாக தமிழ் கட்சிகள் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியமை தொடர்பாக ஊடமொன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ரணிலின் இந்தியப் பயணம்

இதன் போது மேலும் பதில் வழங்கிய அவர், “ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப் பயணம் திட்டமிட்டவாறு இந்த மாத இறுதியில் முன்னெடுக்கப்படும்.
இலங்கை தொடர்பாக இந்தியத் தரப்புக்குப் பல விடயங்கள் தெரிவிக்கப்படும் எனவும் குறிப்பாக இந்தியா தமிழ் மக்களின் விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துகின்றது.
இதனால், தமிழர் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்களுக்கு அதிபர் அதிகம் முக்கியத்துவம் கொடுத்து அவற்றை இந்தியத் தரப்புக்குத் தெளிவுபடுத்துவார்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தியப் பிரதமருக்கு முட்டிமோதிக் கொண்டு கடிதம் அனுப்புவது பயனற்றது. அரசியல் இலாபம் கருதியே தமிழ்க் கட்சிகள் இவ்வாறு நடந்துகொள்கின்றன.
சமஷ்டி தீர்வு

13 ஆவது திருத்தச் சட்ட நடைமுறை உடனடி சாத்தியமற்றது. நாடாளுமன்றத்தின் மூலமே அது அனுமதிக்கப்பட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரும் சமஷ்டி தீர்வு இது ஒருபோதும் சாத்தியமற்றது. அரசு அதற்கு அனுமதி வழங்காது. கூட்டாட்சி எனப்படும் சமஷ்டி என்பது நாட்டைத் துண்டாடும் என்பது அனைவருக்கும் தெரியும்.
இலங்கையில் தற்போதுள்ள அரசமைப்பை மறுசீரமைத்து அல்லது புதிய அரசமைப்பு மூலம் நாட்டு மக்கள் விரும்பும் தீர்வை அதிபர் ரணில் விக்ரமசிங்க தனது பதவிக் காலத்துக்குள் வழங்குவார்" என்றார்.