கொழும்பில் முற்றுகையிடப்பட்ட முக்கிய பகுதி! குவிக்கப்பட்ட அதிரடிப் படையினர்
மூன்றாம் இணைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பின் முக்கிய பகுதியான காலிமுகத் திடலிலுள்ள அரச தலைவரின் செயலக முன்றலை வந்தடைந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அப்பகுதியை முற்றுகையிட்டுள்ளனர்.
அதேவேளை அரச தலைவரின் செயலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசேட அதிரடிப்படையினர், கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அரச தலைவரின் செயலக முன்றலில் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டாம் இணைப்பு
கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு அருகிலிருந்தும், பி.டி.சிரிசேன மைதானத்திற்கு அருகிலிருந்துமென இரு இடங்களில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணிகள் ஆரம்பமாகியிருந்தன.
இந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மக்களுடன் ஆர்ப்பாட்டப் பேரணியில் இணைந்துள்ளார்.
இதன்போது மக்கள் சவப்பெட்டியை சுமந்து வருவதை காணக்கூடியதாக இருப்பதுடன், பலர் நாட்டின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச போன்று வேடமிட்டு இந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் பசில் போன்று வேடமிட்டவர்கள் “என்னால் நாட்டை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது, மன்னித்து விடுங்கள்” என ஒப்பாரியுடன் கூறிக்கொண்டு பேரணியில் இணைந்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையினையடுத்து, அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
கொழும்பை முற்றுகையிட்டு குறித்த போராட்டம் மாபெரும் அளவில் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவான பொது மக்கள் கொழும்பு நோக்கி படையெடுத்துள்ளதாக தெரியவருகிறது.
ஹட்டன், பொலன்னறுவை, காலி ஆகிய பிரதேசங்களிலிருந்தும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் கொழும்பை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், இந்த நாட்டிலுள்ள மக்கள் இன்று ஒரு துரதிஷ்டமான காலத்தை எதிர்கொண்டுள்ளனர், இந்த அரசாங்கத்தை இனியும் இந்த நாட்டை ஆள அனுமதிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.