கொழும்பு - இரத்மலானையில் இருந்து சர்வதேச விமான சேவை
கொழும்பு - இரத்மலானை விமான நிலையத்திலிருந்து மீண்டும் சர்வதேச விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க (D. V. Chanaka) தெரிவித்துள்ளார்.
சுமார் 54 வருட இடைவெளிக்குப் பின் இந்த விமான நிலையத்தில் இருந்து மீண்டும் சர்வதேச விமானங்களை தரையிறக்க இலங்கை அரசாங்கம் தயாராகி வருகிறது.
இலங்கையின் பொருளாதாரம் சர்வதேச பயணிகளின் சுற்றுலா வருவாயை பெரிதும் சார்ந்துள்ளது, எனவே இதன் மூலம் டொலர்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிருந்து தென்னிந்தியா மற்றும் மாலைதீவு போன்ற இடங்களுக்கு விமான சேவைகள் மேற்கொள்ளப்படும் எனவும், இரண்டு விமான நிறுவனங்கள் ஏற்கனவே பிராந்திய மற்றும் சர்வதேச விமான சேவைகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க குறிப்பிட்டார்.
இதற்கு மேலதிகமாக சில விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.