கமராவிற்குள் மறைத்து கடத்தப்பட்ட போதைபொருள்...! சிக்கிய இளைஞர்
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றிற்குத் தனியார் பேருந்து மூலம் சிசிடிவி (CCTV) கமராவிற்குள் மறைத்து அனுப்பிவைக்கப்பட்ட 34 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவரே நேற்று (26-03-2026) அதிகாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று காவல் நிலைய பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு காவல்துறை பரிசோதகர் பகீரதன் தலைமையிலான குழுவினர் இந்த அதிரடிச் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
குற்றத்தடுப்புப் பிரிவு
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் கொழும்பில் அடையாளம் தெரியாத நபரொருவர் சிசிடிவி கமரா அடங்கிய பொதி ஒன்றைப் பேருந்து நடத்துனரிடம் ஒப்படைத்துள்ளார்.

குறித்த பொதியை அதில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு அக்கரைப்பற்றில் ஒப்படைக்குமாறு கோரியுள்ளார்.
இது குறித்துக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, காவல்துறையினர் அதிகாலை மூன்று மணி முதல் அக்கரைப்பற்று நகர்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதையடுத்து, குறித்த பேருந்து அக்கரைப்பற்றை வந்தடைந்ததும் நடத்துனர் வழங்கிய தகவலின்படி பொதியை வாங்க வந்த இளைஞரை மறைந்திருந்த காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

பின்பு, அந்தப் பொதியைச் சோதனையிட்ட போது கமராவிற்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |