தடுப்பூசி மருந்தொன்றை 10 பேருக்கு வழங்கிய மருத்துவர்- முறையிட்ட ஜெனரலை பதவி நீக்கம் செய்த கோட்டாபய!
ஸ்ரீலங்கா துறைமுக அதிகார சபை ஊழியர்களுக்கு அந்த சபையின் மருத்துவர் ஒருவர் , அஸ்ட்ராசெனகா தடுப்பூசி மருந்தொன்றை 10 பேருக்கு வழங்கியிருப்பதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
குறித்த மருத்துவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயாரான ஜெனரல் தயா ரத்நாயக்க ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்
ஸ்ரீலங்கா துறைமுக அதிகார சபையின் தலைவர் பதவியிலிருந்து ஸ்ரீலங்கா அரச படையின் மூத்த அதிகாரியாக இருந்த ஜெனரல் தயா ரத்நாயக்க விலகியமைக்கான காரணம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி கொண்டுவரப்பட்டபோது, இரண்டாவது அரச சேவையாளர்கள் தடுப்பூசி பெற்றுக்கொண்ட இடமாக ஸ்ரீலங்கா துறைமுக அதிகார சபை காணப்படுகின்றது. ஜெனரல் தயா ரத்நாயக்க கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியில் இருப்பதால் அஸ்ராசெனகா தடுப்பூசிகளை உடனடியாக துறைமுக அதிகார சபை ஊழியர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துறைமுக ஊழியர்களுக்கு தடுப்பசி செலுத்தும் பணியை துறைமுக அதிகார சபையின் விசேட மருத்துவராக கடமைபுரிகின்ற பெண் மருத்துவரே தலைமை தாங்கி முன்னெடுத்திருந்தார். எனினும் குறித்த வைத்தியர் குப்பி ஒன்றில் இருந்த தடுப்பூசி மருந்தை 10 பேருக்கு செலுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததோடு உள்ளக விசாரணையில் அதனை அவர் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகின்றது.
குறித்த மருத்துவருக்கு எதிராக துறைமுக அதிகார சபையின் தலைவராக பதவிவகித்த ஜெனரல் தயா ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறையிட்டு தற்போது விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விசாரணை முடியும்வரை மருத்துவரும் பணிநீக்கப்பட்டதை தொடர்ந்து அந்தப் பெண் மருத்துவர் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் மனைவியின் மிகநெருக்கமான உறவினர் என்பது ஜெனரல் தயா ரத்நாயக்கவுக்கு தெரியாமல்போய்விட்டதால் உடனடியாக அவரை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளும்படி வெளிநாடுகளில் இருந்தும்கூட அழைப்புக்கள் வந்ததாகக் கூறப்படுன்றது.
இந்த நிலையிலேயே துறைமுக அதிகார சபையின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கைத்தொழில் அமைச்சின் செயலாளராக ஸ்ரீலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷசவினால் நியமிக்கப்படவிருந்த நிலையில், அப்பதவியை ஏற்கப்போவதில்லை என்று தயா ரத்நாயக்க அதிரடியாக அறிவித்துள்ளார்.
தற்போது துறைமுக அதிகார சபையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கப்டன் நிஹால் கெப்பட்டிபொல ராஜபக்ச குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே ஸ்ரீலங்காவின் தென்னிலங்கை அரச மருத்துவமனையின் குளியலறையில் இருந்து அஸ்ராசெனகா தடுப்பூசிகள் வீசப்பட்ட நிலையில், கண்டுபிடிக்கப்பட்டமை மற்றும் கொழும்பு மாவட்டத்தில் உள்ள சிலருக்கு காலி மாவட்டத்தில் வைத்து அஸ்ராசெனகா தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டமை போன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.