உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளை அமைப்பின் தளபதி இலங்கை விஜயம்!
அமெரிக்க பசிபிக் கடற்படை தளபதி Steve Koehler (அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கோலர்) 2026 பெப்ரவரி 19 முதல் 21 வரை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது, அவர் இலங்கை அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ பிரதிநிதிகளை சந்தித்து, கடல் பாதுகாப்பு மற்றும் பிராந்திய நிலைத்தன்மை தொடர்பான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாட உள்ளார்.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் செயல்திறன் மேம்பாட்டை வலுப்படுத்துவது குறித்தும் பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாவது இலங்கை விஜயம்
உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளை அமைப்பாக விளங்கும் United States Pacific Fleet, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல் மார்க்கங்களை பாதுகாத்து, பிராந்திய கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

அட்மிரல் கோலரின் இது இரண்டாவது இலங்கை விஜயமாகும். முக்கிய சர்வதேச கடல் பாதைகளின் சந்திப்புப் பகுதியில் அமைந்துள்ள இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தை அமெரிக்கா உயர்வாகக் கருதுகிறது என்பதை இது பிரதிபலிப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்க உயர்ஸ்தானி காரியாலயம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விஜயம் அமெரிக்கா - இலங்கை பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமையும் எனவும், கடல் பரப்பறிதல் (maritime domain awareness), நாடுகடந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுதல் மற்றும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஆதரிக்கும் நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |