முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தவர்கள் ஒரு வருடத்தின் பின்னர் விடுதலை
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்தினார்கள் என கடந்த ஆண்டு மட்டக்களப்பு கிரான் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட 10பேரும் இன்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அன்றைய தினம் அவர் உட்பட 10 பேர் நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி, கடலில் பூக்களைத் தூவி, அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அத்துடன் அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்யப்பட்ட நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கல்குடா காவல்துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்து.
வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் இவ் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நேற்று நீதிமன்றம் பிணை வழங்கியதையடுத்து இன்று காலை 10 பேருக்கும் சிறைச்சாலையில் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் நண்பகல் 1 மணியளவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வழக்கில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி ரம்ஷீன் உட்பட சட்டததரணி குலாம் விண்ணப்பித்த பிணை மனுவின் அடிப்படையில் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
