மொட்டுக் கட்சிக்குள் பிளவு! அமைச்சு பதவிக்கான போட்டி ஆரம்பம்
புதிய அமைச்சரவையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது சம்பந்தமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் கடும் போட்டி ஆரம்பித்துள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.
இவர்கள் அரச தலைவர் மற்றும் பிரதமரை அடிக்கடி சந்தித்தும், பல்வேறு தரப்பினர் ஊடாகவும் தமக்கு அமைச்சு பதவிகளை வழங்குமாறு கோரிக்கை முன்வைத்து வருவதாக கூறப்படுகிறது.
அரச தலைவர் மற்றும் பிரதமர் உட்பட அமைச்சரவையின் எண்ணிக்கையை 25 ஆக குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் மீதமுள்ள 23 அமைச்சுக்களுக்கு ஏற்கனவே 13 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சுமார் 10 அமைச்சு பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதுடன் ஏற்கனவே அந்த கட்சியை சேர்ந்த 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
மேலும் ஐந்து அமைச்சு பொறுப்புக்கள் பொதுஜன பெரமுனவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அமைச்சு பதவிகளுக்கான கோரிக்கையை விடுத்துள்ளனர். அமைச்சரவையில் தினேஷ் குணவர்தன மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு மேலதிகமாக இதர கட்சிகளுக்கு 11 அமைச்சு பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளன.
இதர அரசியல் அணியில் அங்கம் வகிக்கும் நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த, விஜயதாச ராஜபக்ச, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, நளின் பெர்னாண்டோ, டிரான் அலஸ் ஆகியோர் ஏற்கனவே அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கு மேலும் இரண்டு அமைச்சு பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மீதமுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், ராஜாங்க அமைச்சர்களும் அடுத்த வாரம் பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளனர். ராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக வரையறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.