மகிந்தவின் கீழ் பணியாற்றிய அதிகாரிகளுக்கு சிக்கல்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கீழ் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் அவரது பதவிக்காலம் நிறைவடையும் வரை பணியாற்றிய அனைத்து அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் முறைகேடான வருமானம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தக் கோரி, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிவில் சமூக பிரதிநிதிகள் குழு மூலம் இவ்வாறு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது நிதி மோசடி குற்றங்களை சுமத்தியிருந்தாலும் அப்போது அவரைச் சூழ்ந்திருந்த அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் தற்போதைய அமைதியான கொள்கையைப் பின்பற்றுவதாக இந்த பிரதிநிதிகள் விமர்சன ரீதியாக சுட்டிக்காட்டினர்.
வரம்பற்ற செல்வம்
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத், “சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வரம்பற்ற செல்வம் குறித்த தகவல்களை ஜனாதிபதி செயலகத்தில் உள்ள ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்த முடியும்.

அந்த தரவுகளின் அடிப்படையில் முறையான விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நான் கோரியிருந்தேன்.
சேவையில் இணையும் போது எந்தவொரு சொத்துக்களும் இல்லாத சில அதிகாரிகள் பின்னர் மிகவும் செல்வந்தர்களாக மாறிவிட்டதாக கடுமையான சந்தேகம் உண்டு.
பொதுமக்கள் மத்தியில் இந்த சந்தேகத்தைப் போக்க சுயாதீன விசாரணையை நடத்துவது அவசியம்.” என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |