குருந்தூர் மலை அடாவடிகள் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறையீடு
முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் கடந்த 14 ஆம் அன்று சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் இன்றையதினம் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடானது முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், க. சிவநேசன், ஆதி ஐயனார் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், இரத்தினம் ஜெகதீசன், ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் ஆகியோரால் வவுனியாவில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டது.
வழிபாட்டுரிமை மறுப்பு

குறிப்பாக குருந்தூர் மலையில் கடந்த 14ஆம் திகதி வெள்ளிக் கிழமையன்று, பிரதோச தினத்தில் சைவத் தமிழ் மக்கள் சிலர் விசேட பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்றபோது பெரும்பான்மை இனத்தவர்களாலும் மற்றும், பௌத்த துறவிகளாலும் குழப்பம் விளைவிக்கப்பட்டதுடன், பொங்கலுக்காக அங்கு தீ மூட்டப்பட்டபோது காவல்துறை உத்தியோகத்தர் ஒருவராலும், பெரும்பான்மை இனத்தவர் ஒருவராலும் சப்பாத்து கால்களினால் மிதிக்கப்பட்டு அணைக்கப்பட்டது.
அத்தோடு வழிபாடுகளை மேற்கொள்ள வருகைதந்த சைவத்தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும், சமூக செயற்பாட்டாளர்களும் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர்.
காவல்துறையினரால் அச்சுறுத்தல்

இந் நிலையில் அவ்விடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அங்கு சைவ வழிபாட்டுரிமையினைத் தடுக்கும் வகையில் செயற்பட்ட பௌத்த தேரர்களுக்கும், பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் ஆதரவாகச் செயற்பட்டிருந்ததுடன், சைவ வழிபாட்டுரிமைகளைத் தடுக்கின்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.
அந்நாளில் குருந்தூர்மலையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணனும் காவல்துறையினரால் தள்ளிவிடப்பட்டு அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
