மத்திய கிழக்கில் கைவிடப்படும் தமிழ் பெண்கள் தொடர்பில் கரிசனை
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் சென்று கைவிடப்படும் தமிழ் பேசும் வடக்கு கிழக்கு பெண்கள் தொடர்பில் தங்களுக்கு அறியப்படுத்துமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் ஊடக சந்திப்பொன்றை நடத்திய அக்கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் சிறிஞானேஸ்வரன் (Srignaneswaran), ஒப்பந்தங்களின்றி இவ்வாறு செல்லும் பெண்களுக்கு பணிச் சுமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“ மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்பிற்காகச் செல்லும் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் ஆசைவார்த்தைகள் ஊட்டப்பட்டு தமது பொருளாதார நெருக்கடியைத் தணிப்பதற்காகவும் பிள்ளைகளின் எதிர்கால நலன்களுக்காவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல் பயண அனுமதி (விசிட்டர் விசா) மூலம் முகவர்களால் கடத்தப்படுகின்றனர்.
பின்னர் அங்கு வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படும் அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் கொடுமையானவை. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடாக பயணிக்கும் போது தொழில் ஒப்பந்தம், காப்புறுதி, பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்படும்.
தவறான வழிகளில் செல்பவர்களுக்கு இவை எதுவும் கிடைக்காது. கொத்தடிமைகளாக அங்கு நடத்தபடும் நிலையை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.
அவர்களில் பலர் காணாமல் போயுள்ளதுடன், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.
வன்கொடுமைகளை அனுபவிக்கும் பணிப்பெண்கள் சில நாடுகளின் இலங்கைத் தூதரங்களுக்கு முறையிட்ட போதும் அப் பெண்கள் மீளவும் முகவர்களிடமே கையளிக்கப்பட்டு வேறு இடங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இவ்வாறு நிர்க்கதியானவர்கள் மற்றும் காணாமல் போயுள்ளவர்களைத் தேடும் முயற்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்படும். அவ்வாறானவர்களின் குடும்பங்கள் தம்மைத் தொடர்புகொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.