மூத்த ஊடகவியலாளர் சபேஸ்வரனின் மறைவு - யாழ். ஊடக மன்றத்தின் இரங்கல் அறிக்கை
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் மறைவுச் செய்தியானது ஊடகத் துறைக்கு மிகுந்த ஒரு அதிர்ச்சியையும், பாரிய இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதுடன் அவரது குடும்பத்துக்கு யாழ். ஊடக மன்றம் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது.
நீண்ட கால ஊடக அனுபவத்தை அவர் கொண்டிருந்ததுடன் யாழ். பல்கலைக்கழக ஊடக வழங்கல் பயிற்சி மையத்தின் விரிவுரையாளராக கடமை புரிந்து பல ஊடகவியலாளர்களை உருவாக்கிய பெருமையும் அவரை சாரும்.
அர்ப்பணிப்புள்ள பணிகள்
அத்துடன் தினக்குரல் பத்திரிகையின் முன்னைநாள் செய்தி ஆசிரியராகவும் சிறப்பாக பணியாற்றி பல விடயங்களை வெளிக்கொணர்ந்து சமூகத்துக்கு பல நல்ல விடயங்களை புரிந்ததில் அவரது பங்கு அளப்பரியது.

தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய அவர், ஊடகவியலாளர்களின் குரலாகவும், அவர்களின் உரிமைப் போராட்டங்களில் முன்னின்று உழைத்த ஒரு சிறந்த ஆளுமையுமாவார்.
அத்துடன் தமிழ் மக்களது உரிமைசார் போராட்டங்கள் தொடர்பான செய்திகளை நடுநிலையாக பிரசுரித்து தமிழ் மக்களின் போராட்டங்களுக்கு வலுச்சேர்த்ததில் அவரது பங்கு இன்றியமையாத ஒன்றாகும்.
அவரது உயிரும் உடலும் மறைந்தாலும் ஊடகத்துறையில் அவர் புரிந்த அர்ப்பணிப்புள்ள பணிகள் தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் அழியாத தடமாக நிலைத்திருக்கும்.
அன்னாரின் சாந்திக்காக இறைவனை பிரார்த்திப்பதோடு அவரை இழந்து வாடும் உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |