ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் தெரிவில் கருத்து முரண்பாடு!
ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கடையிலான கூட்டம் அக்கட்சியின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற போது கருத்து முரண்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தெரிவுக்காக அதன் தற்போதைய அமைப்பாளாகள் மற்றும் ஆதரவாளர்களுக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார(Ranjith Madduma Bandara), எரான் விக்ரமரட்ண,(Eran Wickramaratne) புத்திக பத்திரன(Puddhika Pathirana) மற்றும் உமா சந்திரபிரகாஸ்(Uma Chandrapragash) ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் கட்சியின் செயலாளர் ஆதரவாளர்களின் கருத்துக்களை பெற முற்பட்டிருந்தார்.
இதன்போது அக்கட்சியின் வவுனியா மாவட்ட சிரேஸ்ட உறுப்பினர்கள் தாம் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து இக்கட்சிக்காக செயற்படுகின்ற போதிலும் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
அமைப்பாளர்கள் தமக்கு எந்தவிதமான அழைப்புகளையும் விடுவதில்லை என தெரிவித்ததுடன் மக்கள் மத்தியிலும் கடசியின் செயற்பாடுகளை கொண்டு செல்வதில்லை எனவும் குறிற்றம் சாட்டினர்.
இதன்போது மற்றுமொரு ஆதரவாளர் ஊடகங்கள் இங்கு உள்ளமையினால் இவ்வாறான விடயங்களை பேசுவதை தவிர்க்குமாறு கேட்டிருந்ததுடன் மேலும் சில உறுப்பினர்களும் கட்சியின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தும் நிலை ஏற்பட்டதால் குறித்த கருத்துப்பெறும் செயற்பாடு நிறுத்தப்பட்டு கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார உரையாற்றியிருந்தார்.
இந்நிலையில் அங்கு பிரசன்னமாகியிருந்த சில ஆதரவாளர்கள் தமது வீட்டுத்திட்ட பிரச்சனைகள் மலசலகூட பிரச்சனைகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்களுக்கு எடுத்து கூறியபோது புத்திக பத்திரன மேடையில் இருந்து கீழே வந்து அவர்களை அழைத்து குறைகளை கேட்டறிந்ததுடன் தொலைபேசி இலக்கங்கள் கடிதங்கள் என்பவற்றை பெற்றதோடு தனது தொலைபேசி இலக்கங்களையும் ஆதரவாளர்களிடம் வழங்கியிருந்ததை அவதானிக்க முடிந்தது.