ஆப்கானில் தலிபான்களுக்கிடையே வலுத்துள்ள மோதல் - பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டுள்ள முல்லா பராதர்?
ஆப்கானில் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முன்னர், அவர்களுக்கு இடையே மோதல் வலுத்துள்ளதாக பிரிட்டன் பத்திரிகையான The Spectator தெரிவித்துள்ளது.
இந்த மோதலின் உச்சமாக முல்லா பராதர் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த அமைப்பின் தலைவரான ஹைபத்துல்லா அகுண்ட்ஜாடா உயிரோடு இருக்கிறாரா என்பதே சந்தேகம் என்றும் அந்தப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, யாருக்கு எந்த பதவி என்ற விவகாரத்தில் ஹக்கனி கோஷ்டிக்கும், தற்போது துணைப் பிரதமராக உள்ள முல்லா பராதர் கோஷ்டிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட மோதலில் நாற்காலிகளை தூக்கி அடித்ததாகவும், கொதிக்கும் திரவங்கள் இருந்த பிளாஸ்க்குகளை வீசிக் கொண்டதாகவும், ஹக்கனி கோஷ்டி தலைவர் கலீல் ரஹ்மான் ஹக்கனி, இருக்கையில் இருந்து எழுந்து பராதருக்கு குத்து விட்டதாகவும் The Spectator கூறியுள்ளது.
அப்போது அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பராதர் வீடியோ உரை, பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டு எடுத்ததாக இருக்கலாம் என்றும் The Spectator குறிப்பிட்டுள்ளது. இதேபோல, அகுண்டாஜாடா எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாத நிலையில், அவர் இறந்திருக்கலாம் என பேச்சுகள் எழுந்திருப்பதாக The Spectator குறிப்பிட்டுள்ளது.